திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சட்டாங்குளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வந்தவாசியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விக்னேஷின் பெற்றோர் விவசாயக் கூலிகள்.
கண் பார்வையற்ற மாணவனுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்! - Govt Laptop
திருவண்ணாமலை: வந்தவாசியைச் சேர்ந்த கண்பார்வையற்ற விக்னேஷ் என்ற மாணவன் மனு அளித்த ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மடிக்கணினி வழங்கினார்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விக்னேஷ் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே என்னுடைய படிப்பிற்கு பெற்றோரால் அதிகம் செலவிட முடியாது. என்னுடைய படிப்பிற்கு மடிக்கணினி தேவைப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவர் விக்னேஷை அழைத்து மறுநாளே அவருக்கு மடிக்கணினி அளித்தார். இது பற்றி விக்னேஷ் கூறுகையில், "நான் மடிக்கணினி மூலம் பார்வையற்றோருக்கு பயன்படக்கூடிய பல காணொலிகளை பதிவிறக்கம் செய்துள்ளேன்; அவற்றை படிக்க முடியும். என்னுடைய கனவு ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆவதுதான். இந்த மடிக்கணினி பெற்றதன் மூலம் ஐஏஎஸ் பயின்று ஆட்சியர் ஆகும் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.