திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக 1,633 நியாய விலைக் கடைகளில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 281 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் மொத்தம் ரூ. 152.26 கோடி செலவில், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சி , தேரடி வீதி , கற்பகம் கூட்டுறவு வளாகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு! இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தேரடி வீதி , ஜோதி பூ மார்க்கெட், திருவூடல் தெரு , காய்கறி மார்க்கெட் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது, ' வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளி கடைப்பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும். குறிப்பாக கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கரோனா பாதித்தாலும், பாதிப்பு குறைவாக உள்ளது' என அறிவுறுத்தினார். முன்னதாக , மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி , சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜிதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:சிவசங்கர் மாணவிகளுக்கு தாத்தா மாதிரி - பாபாவை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்!