திருவண்ணாமலை: உலகப்பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் நேற்று (டிச.6) அதிகாலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதனைக் காண்பதற்காக பிற மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி என்ற நிலை இருந்து வந்தது.
மேலும் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் ஆகியோர்களுக்கு மட்டும்தான் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு விதமாக கோயிலுக்குள் நுழையும் அனுமதிச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு வகையான அனுமதிச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அட்டை வடிவில் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் என பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு தனித்தனியாக பாஸ் என்று சொல்லக்கூடிய நுழைவுச்சீட்டும் அச்சிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த நுழைவுச்சீட்டு எவ்வளவு எண்ணிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது என்பது மர்மமாகவே உள்ளது. ஏனெனில் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு உண்டான அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.