திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊரக புத்தாக்க திட்டத்தின் அறிமுக விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உதவி பயிற்சி ஆட்சியர் ஆனந்த்மோகன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், "உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் இந்த ஊரக புத்தாக்க திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் துரிஞ்சாபுரம், வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், தெள்ளார், கலசப்பாக்கம், சேத்பட் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது" என்றார்.