ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது! - Remdesivir medicine sales at black market
திருவண்ணாமலை: கரோனா நோயிலிருந்து உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு, ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை, உயிர்காக்கும் மருந்துகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் இம்மருந்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், இந்த மருந்தை கள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மருந்தகங்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
அவரிடம் இருந்து, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவரான, முகமது இம்ரான்கான் என்பவர் 4 ஆயிரத்து 700 ரூபாய் மருந்தை, 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கள்ளச்சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அவரது, நண்பரான விஜய் என்பவரும், இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். இது குறித்து, குடிமைப் பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வுத் துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாந்திக்கு, நேற்று (ஏப். 29) ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை அருகே, வாகன தணிக்கையில் வைத்து, முகமது இம்ரான்கானை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, விஜய் (27), முகம்து இம்ரான்கான் (26) ஆகியோரை பிடித்து, தாம்பரம் காவல் துறையினரிடம், குடிமை பொருள் வழங்கல் துறை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும், 17 ரெம்டெசிவிர் மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் இம்ரான் கானுக்கு மருந்தை விற்பனை செய்த விக்னேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.