உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, மனித குலத்தையே அலற வைத்துக்கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்த நோய் தொற்று உலக நாடுகளுக்கு சவாலாகவும் இருந்து வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இருப்பினும், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள் அலட்சியத்தோடு வெளியே சுற்றித் திரிகின்றனர். காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்து அவர்களை எச்சரித்தும் நூதன தண்டனை வழங்கியும் வருகின்றனர். அதேபோன்று திருவண்ணாமலையில், படித்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அடுத்த கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலூர் ஏரியில் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடி வந்தனர்.