திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் 10 ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.
மேலும் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இருப்பினும் கரோனா ஊரடங்கு காரணமாக கிராமங்களுக்கு போதுமான வசதிகளைச் செய்திட கால தாமதமாவதோடு, அப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்திடவும் கால தாமதம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம் என்பவரிடம் பலமுறை குடிநீர் கேட்டு புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால், வேறு வழியில்லாமல் அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுப்பட்டு செங்கம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த செங்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூங்காவனம் பொதுமக்களிடையே சமரசத்தில் ஈடுபட்டார். ஊராட்சி மன்றத் தலைவரை வரவழைத்து விரைவாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுத்து அவர்களது குடிநீர் பிரச்னையை முழுமையாகச் சரிசெய்திட ஏற்பாடுசெய்ய வேண்டுமென அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பிறகு ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம் இரண்டு நாள்களில் அவர்களுக்குப் போதுமான அளவிற்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன்பேரில் அப்பகுதி மக்கள் கலைந்துசென்றனர்.
அதுபோல தங்களது பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய்தொற்று ஏற்படும் இடர் உள்ளதால் உடனடியாகத் தங்களது பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரி நோய்த்தொற்றுலிருந்து தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் 478 மருத்துவ முகாம்கள்...! - மாநகராட்சி ஆணையர்