திருவண்ணாமலை: ஆரணி டவுன் தேவிகாபுரம் ஆரணி சாலையில் உள்ள ஆரணி கிளை கூட்டுறவு நகர வங்கி இயங்கி வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ தங்கம் போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார்.
மேலும் கடந்த 27.10.21ல் செய்யாறு துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் அப்போதைய திருவண்ணாமலை இணை பதிவாளர் ராஜ்குமார், ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.