கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து மதுபானங்களை கொள்ளையடிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் உத்தரவின்படி, செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் நடு ஆனைமங்கலம், பரமனந்தல், பகுதியில் மது விலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 55 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த சேட்டு, செந்தில் குமார், உத்திரம் ஆகியோரைக் கைது செய்து, காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு பேரல்களில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறலைக் கண்டுபிடித்து அழித்தனர்.