திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் உயர்ந்து காணப்படுகிறது.
இந்த மழையானது காலை ஆறு மணி முதல் தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கத்தில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்து வரும் கனமழையால் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.