தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2020, 2:52 PM IST

ETV Bharat / state

திருவண்ணாமலையில் நகை, பணத்திற்காக முதியவர் கொலை: 3 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: நகை, பணத்திற்காக முதியவரை கொலை செய்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலையில் நகை, பணத்திற்காக முதியவர் கொலை
திருவண்ணாமலையில் நகை, பணத்திற்காக முதியவர் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த குங்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ், அலமேலு(80) என்ற வயதான தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

முதியவர் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி பாறை மீது குடிசை அமைத்து வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் இவர்களது வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் தாக்கி மூதாட்டி அணிந்திருந்த தோடு , மூக்குத்தி. முதியவரிடம் இருந்த ரூபாய் 20,000 பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

நேற்று (செப்டம்பர் 16) காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இருவரையும் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முதியவர் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி ரமேஷ், காவல் ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வானாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், பிரவீன் , சுபாஷ் ஆகியோர் என்பதும் நகை பணத்திற்காக முதியவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details