தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாண்டியர் கால 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு! - பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

kalvettu
kalvettu

By

Published : Jan 25, 2021, 12:12 PM IST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை கிராமத்தில், மாணிக்கவாசகர் கோவில் உள்ளது. இங்குதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளியதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆர்வலருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் குழுவினர், இக்கோவிலின் கிழக்குப்புற மதில் சுவற்றின் கீழே, இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தனர்.

அதில், விக்கிரம சோழத்தேவர் என்பாரும், சேதி மண்டலத்து நாட்டார் சபையும் சேர்ந்து நெல்வாய் என்ற ஊரில் உள்ள நிலத்தை, இறையிலி (வரி நீக்கிய) நிலமாக அறிவித்து, அதில் ஒருபாதியை இக்கோவிலில் உள்ள திருப்பெருந்துறை உடைய நாயனார்க்கும், மற்றொருபாதியை திருவாதவூர் நாயனார்க்கும் தானமாக வழங்கிய செய்தியை அறியமுடிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள இறைவனை திருப்பெருந்துறை உடைய நாயனார் என்றும், மாணிக்கவாசகரை திருவாதவூர் நாயனார் என்றும் அழைப்பர். இக்கல்வெட்டில் குறிக்கப்படும் விக்கிரம சோழத்தேவர் என்பவர், இரண்டாம் சடையவர்மன் குலசேகரனின் உயர் அதிகாரியாக பணியாற்றியதை, அண்ணாமலையார் கோவிலில் உள்ள முதலாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் (1241-1250) இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி 1243) மூலம் அறியமுடிகிறது.

பாண்டியர் கால 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!

மேலும், சேதிராயர்கள் என்பவர்கள், நடுநாட்டில் திருக்கோவிலூரைத் தலைமையிடமாக வைத்து ஆட்சி செய்த சிற்றரச வம்சம் ஆகும். இந்த சேதிராயர் நாட்டில் உள்ள சபையும், விக்கிரம சோழத்தேவர் என்னும் உயர் அதிகாரியும் இணைந்து இத்தானத்தை வழங்கியுள்ளனர். எனவே இக்கல்வெட்டின் ஆட்சி ஆண்டையும், தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது 1238-1240 வரை ஆட்சிபுரிந்த இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியும், அவனுடன் சிறிது காலம் இணை ஆட்சி புரிந்தவனுமான இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1240) காலத்திய தானம் என்று எடுத்து கொள்ளலாம்.

இதன் மூலம் 1240 ஆம் ஆண்டு வாக்கில் மூன்றாம் ராஜராஜன் சோழ பேரரசிற்குக் கீழ் அரசாண்ட சிற்றரசுகளான காடவராயர்கள், சம்புவராயர்கள், சேதிராயர்கள் யாவரும் மறைமுகமாகப் பாண்டியர் தலையெடுப்பிற்கு அடிகோலினர் என்றும், அதன் விளைவாக பின்னாளில் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1251) எழுச்சி கொண்டு மூன்றாம் ராஜேந்திரனை வென்று சோழ நாட்டை கைப்பற்றினான் என்பதும் தெரியவருகிறது.

இதையும் படிங்க: கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய 7 மாலுமிகள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details