திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி மணிகண்டன் (23). இவர், துந்தகரீகம்பட்டு கூட்ரோடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவரச சிகிச்சை பிரிவில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இதனால் மணிகண்டனுக்கு தகுந்த மருத்துவ உதவி கிடைக்காமல் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடி வந்துள்ளார். பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.