திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் உள்ளே பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலின் பின்புறம் உள்ள 2,668 உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது, மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப தரிசனத்தினை காண 2,500 பக்தர்கள் மலையின் மீது ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
கடந்த 6ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது. பின்னர் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரை, சிறப்பு பூஜைகள் செய்து மலையின் மீது இருந்து கீழே இறக்கப்பட்டு அண்ணாமலையர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக காட்சியளிப்பதாகவும், மேலும் ஒவ்வொரு அடிக்கு 1,008 லிங்கம் உள்ளது என்பது ஐதீகம். இதனால் இந்த ஆன்மீக பூமியில் பலரும் காலில் செருப்பு அணியாமல் உள்ளதும் குறிப்பிடதக்கது.