திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தினமும் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள கிரிவலப் பாதையைச்சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலைக்கு அதிக அளவில் வெளிநாட்டுப் பக்தர்களும் ஆன்மிகப்பயணமாக அடிக்கடி வருகின்றனர்.
அவ்வாறு 30 ஆண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலைக்கு வருகை தந்த லண்டனைச்சேர்ந்தவர் கிளைவ் பிரட்ரிக் நியூமேன் (வயது 79). இந்து மத ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வருகைபுரிந்தார். நாளடைவில் அவர் திருவண்ணாமலைவாசியாகவே மாறினார்.
திருவண்ணாமலையில் சுற்றித்திரியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லண்டனைச்சேர்ந்த முதியவர் இந்தநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலையின் இடது பக்கம் முழுவதும் அவருக்குப் புண்ணாகி உள்ளது. இவர் திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அவரின் நிலையைப் பார்த்த ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த கோரப்சுதன் என்பவர், அவருக்கு உதவ முன்வந்தார். கோரப்சுதன் அந்த முதியவருக்கு அடைக்கலம் கொடுத்தார்.
இந்த நிலையில் கோரப்சுதன் தனது சொந்த மாநிலத்துக்கு விரைவில் திரும்ப உள்ளதால், லண்டனைச் சேர்ந்த முதியவர் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலையைச்சேர்ந்த சமூக சேவகர் மணிமாறனுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த முதியவரை மீட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார். முதியவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி அலுவலர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அலுவலக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மணிமாறன் கூறுகையில், 'ஆன்மிகத்தேடலுக்கு வந்த லண்டனைச் சேர்ந்த முதியவரை இங்குள்ள மக்கள் 'காளிபாபா' என்று அழைத்து வந்தனர். அவரும் திருவண்ணாமலையில் சாதுக்களோடு சாதுவாக வாழ்ந்து வந்தார். தினமும் கிரிவலம் செல்வார். அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் உயிருக்கும் போராடி வருகிறார்.
அவர் குடும்பம் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவர் தன்னுடைய ஆவணங்களையும் தொலைத்து விட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்' என்று கூறினார்.
இதையும் படிங்க:விதவை உதவித்தொகை வழங்க லஞ்சம் - வருவாய் ஆய்வாளர் கைது!