திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் விற்கும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இறைச்சிக் கடைகள் தற்காலிக இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே விற்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் இன்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகே மீன் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். கரோனா பற்றிய அச்சம் தெரியாமல் மக்கள் அலைமோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 3 அடி இடைவெளிவிட்டு மீன் வாங்க வேண்டும் என்று நகர துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.