திருவண்ணாமலை: தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் இராஸ்ரீதரன், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “கரோனா காலத்தில் வெளியே வந்து கரோனா வார்டுக்கு சென்ற ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். ஆபத்துக் காலத்தில் கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் நான் உள்ளேன் என்ற உறுதியை ஏற்படுத்தித் தந்த தலைவர் ஸ்டாலின். தமிழர்களின் தலையெழுத்தை மாற்றியது கலைஞரின் பேனா, இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
திராவிட மாதிரிக்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், அவர் வைத்திருந்த பேனாவுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் ஒதுக்கிய போது, பல பின் தங்கிய சமுதாயத்திற்கு அங்கீகாரமும் கல்வியும் அதிகாரமும் வழங்கி தமிழை வளர்த்த கலைஞரின் பேனாவுக்கு ஏன் கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் வைக்கக் கூடாது.
தமிழர்களின் வாழ்க்கையில் இந்த பேனா எவ்வளவு மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று தெரியுமா? பிஜேபி ஆட்சியில் திமுக கூட்டணியிலிருந்த போதும் பிஜேபியின் மத திணிப்புகளைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற சித்தாந்த ரீதியில் தான் திமுக கூட்டணி வைத்தது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இருந்தபோது தமிழகத்தில் மதத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் தற்போது பாஜக இருக்கும்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதத்திற்கு, நீதித்துறையிலும் காவி புகுந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.