தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு!

By

Published : Mar 22, 2023, 9:28 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது காதலியை அழைத்துக் கொண்டு கத்தியுடன் நுழைந்து, பக்தர்களை மிரட்டிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது காதலியை அழைத்துக் கொண்டு கத்தியுடன் நுழைந்து பக்தர்களை மிரட்டிய நபர்

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் வெளி பிரகாரத்தில் ராஜ கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பேய கோபுரம் என நான்கு கோபுரங்கள் உள்ளன. இவற்றில் பேய கோபுரம் எப்போதும் மூடப்பட்டே உள்ளது. எனவே, மீதம் உள்ள மூன்று கோபுரங்களின் நுழைவாயிலில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் என சுழற்சி முறையில் பக்தர்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கோயிலின் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் வழியாக ஒருவர், ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு கத்தி உடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கத்தி உடன் கோயிலுக்குள் நுழைந்ததைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் அவர் பக்தர்களை மிரட்டி உள்ளார். இதனால், பக்தர்கள் அச்சம் அடைந்து ஓடி உள்ளனர்.

மேலும் கோயிலில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்த அந்த நபர், அங்கு இருந்த கண்ணாடி கதவுகளை சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதனைக் கண்ட கோயில் அலுவலக ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு ஓடி உள்ளனர். அதேநேரம் கோயில் அலுவலகத்தில் உள்ள இணை ஆணையர் அறையில் இருக்கும் இணை ஆணையரின் இருக்கையில் அமர்ந்த நிலையில், கத்தியை வைத்துக் கொண்டு ஊழியர்களை அந்த நபர் மிரட்டி உள்ளார்.

இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கோயிலின் உள்ளே வருவதை அறிந்த அந்த நபர் தான் அழைத்து வந்த பெண் உடன் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அலுவலக அறையில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அந்த நபருக்கு கால் முறிவு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த நபரை காவல் துறையினர் மற்றும் கோயில் ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தின்போது தப்பிக்க முயன்ற அப்பெண்ணையும் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், போதையில் கோயிலுக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல், கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் பெங்களூருவைச் சேர்ந்த அப்பு என்பதும், பிடிபட்ட பெண் அப்புவின் காதலி என்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே அப்புவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கோயிலுக்குள் உள்ள மூன்று நுழைவுவாயிலிலும் காவல் துறையினர் பக்தர்களை தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கத்தி உடன் போதையில் அந்த நபர் எப்படி வந்தார் என்றும், கோயிலின் பாதுகாப்பில் காவல் துறையினர் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பெருங்களத்தூரில் பூட்டிய வீட்டில் திருட்டு - சோசியல் மீடியா பிரபலம் கைது!

ABOUT THE AUTHOR

...view details