திருவண்ணாமலை:போளூர் அடுத்த மட்டப்பிறையூர் கிராமத்தின் அருகே விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போளூர் காவல் துறையினருக்கு இன்று (ஜூலை25) காலை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினரை அழைத்துச் சென்ற காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதே கிணற்றில் வேறு சடலங்கள் இருக்கிறதா என தேடியபோது, மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது.
குலதெய்வ கோயில் பயணம்
கிணற்றின் அருகே நடத்திய சோதனையில் ஆதார் அட்டையும், கடிதமும் சிக்கின. அதைக் கைப்பற்றி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் ஒரே குடும்பத்தினருடையது என தெரியவந்தது.
நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் பகுதியை சாந்திராஜ் (50), இவரது மனைவி மீரா(40). இவர்களது மகன் தேவகுமாரா (23). இவர்கள் நேற்று (ஜூலை24) போளூர் அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்வதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.
காவல் துறை விசாரணை
இந்நிலையில், மீரா, அவரது மகன் தேவகுமாரா ஆகியோரது உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கிணற்றின் அருகே கிடைத்த கடிதத்தில், கடன் தொல்லை காரணமாக மூவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், சாந்திராஜ் உடலை தற்போது தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி வருகின்றனர்.
வாழ நினைத்தால் வாழலாம்..! இது குறித்து போளூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: அப்டேட் இல்லையென்றால் வங்கிக்கணக்கு முடக்கம் என்னும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள் - காவல் துறை எச்சரிக்கை