தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பிரமுகர்கள் பண மோசடி: விதவை பெண் உள்பட இருவர் தீக்குளித்து தற்கொலை - திருவள்ளூரில் விதவை பெண்ணுடன் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திருவள்ளூர் : அரசு வேலை வேண்டி திமுக பிரமுகர்கள் இருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து மன உளைச்சலுக்கு ஆளான பெண்ணும் அவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் வசித்தவந்தவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dead
dead

By

Published : Dec 27, 2019, 5:24 PM IST

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மஞ்சு (38). இவர்களுக்கு சுவாதி (11), ஆயிஷா (9) என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நாகராஜ் இறந்துவிட்ட நிலையில், புட்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத சித்தார்த் (38) என்பவர் மஞ்சுவுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய உறவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பத்தியால்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஏகாம்பரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தன் ஆகியோர் அரசு நியாயவிலைக் கடை, மின் வாரியம் ஆகியவற்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சித்தார்த், மஞ்சுவிடம் தலா ஒரு லட்சம் வாங்கியுள்ளனர். அவர்கள் இதுவரை வேலை பெற்றுத்தர விலை என கூறப்படுகின்றது. ஆனால் வேலை பெற்றுத் தராததுடன் பணத்தையும் தராமல் ஏமாற்றியதால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றித் தீக்குளித்தார்.

இதைக்கண்ட மஞ்சு அவரை காப்பாற்ற முயன்றதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சித்தார்த்தும் அவரைத் தொடர்ந்து மஞ்சுவும் இறந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திமுகவினர் செய்த பண மோசடி விவகாரம்

விசாரணையில், உயிரிழந்த இருவரும் திமுக பிரமுகர் உள்ளிட்டவர்களிடம் தலா ரூபாய் ஒரு லட்சத்தை வேலைக்காக கட்டிய பின் வேலையும் கிடைக்காமல் பணமும் ஏமாற்றப்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டு இறந்தது தெரியவந்தது. அது மட்டுமன்றி, இவர்களைப் போன்று அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினர்களான சாஜன், சேட்டு யாஸ்மின் உள்ளிட்டோர்களிடமும் ஏகாம்பரமும் கோவிந்தனும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

அரசியல் தலையீட்டால் முறையாக விசாரிக்காத காவல் துறையினர், கட்டப்பஞ்சாயத்து மூலம் ஏமாந்த பணத்தை திரும்பப் பெற்றுத் தருவதாகக் கூறி இரு தரப்பையும் சமரசம் செய்துள்ளனர். மேலும், காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கி கால அவகாசம் பெற்றுத் தந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிவாரணமும், மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : வாக்குசீட்டு மை அடுத்தப் பக்கத்திலும் பதிவானதால் பரபரப்பு! கடலூரில் மீண்டும் வாக்குப்பதிவு நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details