தமிழ்நாடு

tamil nadu

மே 2இல் வாக்கு எண்ணிக்கை: திருவள்ளூரில் ஆலோசனைக் கூட்டம்

By

Published : Apr 24, 2021, 2:52 PM IST

திருவள்ளூர்: வருகின்ற மே 2ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணும் பணி குறித்து திருவள்ளூரில் நேற்று (ஏப்ரல் 23) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் எண்ணும் பணி
தேர்தல் எண்ணும் பணி

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில், அம்மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (ஏப்ரல் 23) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா தலைமையில், போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்களுடன் நடைபெற்றது. இதில் மாவட்டத் தேர்தல் அலுவலர் கூறியதாவது:

திருவள்ளுர் மாவட்டத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம்

001. கும்மிடிப்பூண்டி
002. பொன்னேரி (தனி)
005. பூந்தமல்லி (தனி)
006. ஆவடிஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேசன் உயர்நிலை பள்ளி.
003. திருத்தணி
004. திருவள்ளுர்ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
007. மதுரவாயல்
008. அம்பத்தூர்
009. மாதவரம்
010. திருவொற்றியூர் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி

ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறை (EVM /VVPAT Strong Room) காலை 8 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும். வாக்கு எண்ணிக்கை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெறும்.

வேட்பாளர்கள் மேற்கொள்ள வேண்டியவை:

வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வேட்பாளரும் தங்களால் நியமிக்கப்பட்ட முகவர்களுடன் காலை 7 மணிக்கு முன்பாக முன்னிலையாக வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலருக்குப் படிவம் 18இல் மேசைகளுக்கான முகவர் நியமனம் தொடர்பான இரண்டு பிரதிநிகளின் புகைப்படத்துடன் உடனடியாக அளிக்க தெரிவிக்கப்பட்டது.

முகவர்களுக்கு கரோனா பரிசோதனை:

மேற்படி முகவர்களுக்கு ஏப்ரல் 27, 28 ஆகிய இரு நாள்களில் கோவிட்-19 தொடர்பான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை, கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி பரிசோதனையில் தொற்று இல்லை என வரப்பெற்ற நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான அடையாள அட்டை தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும்பொழுது முகக்கவசம்/ஃபேஸ்ஷீல்டு அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டியவை:

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் கைப்பேசி, கேமரா, மடிக்கணினி போன்றவற்றை எடுத்துவர அனுமதியில்லை.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கன்ட்ரோல் யூனிட் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் முகவர்களுக்கு அளித்து ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின்போது கன்ட்ரோல் யூனிட் கருவியில் எண்ணிக்கை முடிவுகளைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் அந்த இயந்திரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு அனுப்பி கடைசியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஐந்து விவிபேட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்பட்டு இவிஎம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை முடிவுற்ற பிறகு ஒவ்வொன்றாக விவிபேட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். அஞ்சல் வாக்குகள் 500 வாக்குகளுக்கு ஒரு மேசை அமைக்கப்படும். அதற்குண்டான முகவர் நியமனம்செய்ய தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேசைக்கும் வெப் கேமரா பொருத்தப்படும் பணி, வாக்கு எண்ணிக்கையை வலைதளத்தில் (Internet) பதிவுசெய்ய இணைப்பு அமைக்கும் பணி நேற்று (ஏப்ரல் 23) முதல் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட கூடுதல்தேர்தல் அலுவலர் வெ. முத்துசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனமிகா ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details