திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில், ஒன்றியக் குழுத் தலைவர் சுஜாதா சுதாகர் தலைமையில் சிறப்புக் கூட்டமானது கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்களின் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது குறித்தும் விவாதித்தனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுக, பாமக, திமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையினால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் பேசிய திமுக உறுப்பினர், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனவும் துணைத் தலைவருக்கென ஒரு தனி அறை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் புதிதாக அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் பழைய தீர்மானத்தின் நகல் போன்று உள்ளது எனவும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி விவாதித்தார். இதனால் அந்தக் குறிப்பிட்ட தீர்மானம் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.