தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த மக்கள்!

Tiruvallur train accident: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2010ல் இருந்து கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இன்னும் முடியாததே விபத்து காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 5:04 PM IST

thiruvallur-three-people-died-trying-to-cross-the-railway-tracks-public-protest
திருவள்ளூரில் ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற 3 பேர் ரயிலில் அடிப்பட்டு பலி... பொதுமக்கள் போராட்டம்!

திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2010ல் இருந்து கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இன்னும் முடியாததே விபத்து காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வேப்பம்பட்டு பகுதியிலிருந்து திருமழிசை, பூந்தமல்லி, புதுச்சத்திரம் பாதையில் சென்னை செல்வதற்குப் பிரதான வழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே, ரயில்வே இருப்புப் பாதையைக் கடப்பதற்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் உடனடியாக ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்துக் கடந்த 2010ஆம் ஆண்டு சுமார் 30 கோடி அளவில் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு 41% முடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை பணிகள் மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளதால் ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று (நவ.19) வேப்பம்பட்டு ரயில்வே இருப்புப் பாதைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகச் சென்ற விரைவுவண்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் மூன்று நபர்களின் உடல்களைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்னை திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சுமார் மூன்று கிலோமீட்டருக்கு மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனே முடிக்க வேண்டும் எனவும், இதுவரை இழந்த உயிர்கள் போதும் இனிமேல் எந்த உயிரிழப்பும் மேம்பாலப் பணியின் காரணமாகப் போகக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:போலீசாரை போதை ஆசாமிகள் கத்தியால் மிரட்டிய வழக்கு; 4 மாதமாக தலைமறைவாக இருந்த நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details