தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2023, 8:31 PM IST

ETV Bharat / state

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற டாஸ்மாக் மேலாளர் கைது!

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையின் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற டாஸ்மாக் மேலாளர் கைது!
ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற டாஸ்மாக் மேலாளர் கைது!

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையின் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு என 2 மாவட்டங்களாகப் பிரித்து, டாஸ்மாக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 137 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் அமைப்பதற்காக, தாணு என்பவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னனிடம் விண்ணப்பித்துள்ளார். அந்த வகையில் பார் நடத்த அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணம் தரவில்லை என்றால், ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரையும் இழுத்து மூடுவேன் எனவும்; திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏற்கனவே காக்களூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் பார் நடத்தி வரும் தாணு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதனை கொடுக்க விரும்பவில்லை. எனவே, இது குறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் தாணு புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், காவல் ஆய்வாளர் தமிழரசி மற்றும் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாயை கொடுப்பதற்காக தாணு, காக்களூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை, ஓட்டுநர் சங்கரிடம் கொடுக்குமாறு டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் கூறியுள்ளார்.

இதன் பேரில் தாணு, ஓட்டுநர் சங்கரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர், டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர் சங்கர் ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதிலும், அதனைப் பெறுவதிலும் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பதிலும் இருந்து விடுபட வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

எனவே, லஞ்சம் பற்றிய புகார்களைத் தெரிவிக்க https://www.dvac.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் சென்று, அதில் உள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் பொதுநலன் மற்றும் நாட்டு நலன் கருதி, தகவல் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:டெண்டர் ஒதுக்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் - பாஜக எம்எல்ஏ மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details