திருவள்ளூர்: சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆர் நகர், மலையா நகர் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ள போதிலும் வீட்டுமனைப்பட்டா இல்லாததால் ஊராட்சி மன்ற நிர்வாகம், சாலை, குடிநீர், பொது கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்து தர மறுக்கிறது. மேலும் மின் இணைப்பு வழங்கவும் தடைவிதித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி வாசிகள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் முதல் தமிழ்நாடு முதலமைச்சர் வரை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மின் இணைப்பு வழங்க பரிசீலனை செய்யுமாறு மின்வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மின்வாரிய நிர்வாகம் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வீட்டு மனை பட்டா, மின் இணைப்பு, சாலை குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், கைகளில் கறுப்பு கொடி ஏந்தியும், அலுவலர்களின் அலட்சிய போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களது கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர தவறினால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதோடு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்ற மார்கழி பௌர்ணமி பூஜை ரத்து