திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தில் அதே பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிராமத்திற்கு அருகில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தைச் சார்ந்த மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு சர்வே செய்து வழங்கப்படாத நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனிதவள ஆணையத்திடம் புகார் செய்திருந்தனர். புகாரின் பேரில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் சர்வீஸ் செய்து வழங்க வேண்டும் என்று மனிதவள ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் வருவாய்த்துறையினர் காவல் துறை பாதுகாப்புடன் இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும், நேற்று (ஜூன் 24) காலை திடீரென கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இலவச வீட்டுமனை சர்வே செய்து அமைக்கப்பட்டிருந்த சர்வே கற்களை அகற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பள்ளிப்பட்டு சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.