வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. நேற்று இரவுமுதல் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை அடைந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்கட்டமாக 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், மாலை ஆறு மணியளவில் நான்காயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது, மேலும் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த நீரானது காவனூர், குன்றத்தூர், அடையாறு வழியாக கடலில் போய் இணைகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அவ்விடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மேற்பார்வையில் தொடர்ந்து பார்வையிட்டுவருகின்றனர்.