கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு சாத்தியப்படவில்லை. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை ஒரே தவணையில் சாதனை அளவாக 8.60 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது.
அதன் பின்னர், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாத காரணத்தால் பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விட கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர்.