திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியைச்சேர்ந்தவர், தனஞ்செழியன்.இவரது மகன் முருகேசன்(வயது 38). கூலித்தொழிலாளியாக வேலை செய்துவருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம்(நவ-6) முருகேசன் வேப்பம்பட்டு அண்ணா நகர் முதல் தெருவைச்சேர்ந்த தனது நண்பரான தேவா (வயது 53) என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் டன்லப் நகர் சாலையில் இருவரும் வந்துகொண்டிருந்தபோது பின்னாள் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த கத்தியால் முருகேசனை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தொழிலாளி முருகேசன் உடலை மீட்டு செவ்வாய்பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகரைச்சேர்ந்த சரவணன் (22), அவரது நண்பர்களான பார்த்திபன் ( 23), வினோத் ( 20) ஆகிய 3 பேரை செவ்வாய்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.