தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூர் மாணவியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்:கிடைத்தது பிரேதப்பரிசோதனை முடிவு!

By

Published : Jul 26, 2022, 6:51 PM IST

திருவள்ளூர் அருகே உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் சடலம், பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாணவி மரணம்: பிரேத பரிசோதனை முடிவு - சொந்த ஊரில் அஞ்சலி!
திருவள்ளூர் மாணவி மரணம்: பிரேத பரிசோதனை முடிவு - சொந்த ஊரில் அஞ்சலி!

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் காலை 8 மணிக்கு சிபிசிஐடி அலுவலர்கள் முன்னிலையில் 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், தடயவியல் நிபுணர்களுடன் மாணவியின் சகோதரன் ஒப்புதலுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

இதற்கிடையில், “மாணவி உயிரிழப்பிற்கான காரணத்தை சிபிசிஐடி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். தற்கொலைக்கான காரணம் குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை” எனக்கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது அண்ணன் கையெழுத்திட மறுத்தார். இதனால் ஒன்றரை மணி நேரம் காவல்துறையினர், திருவள்ளூர் எம்எல்ஏ வீ.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், அருணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும், உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முழுமையான சம்மதம் இல்லை எனவும், சந்தேக மரணம் என திருத்தி, எழுதிய பின் ஒன்றரை மணி நேரம் கழித்து மாணவியின் சடலத்தை பெற்றுக்கொள்வதாக கூறியதால் மாணவியின் உடலை பெற அவரது சகோதரர் சரவணன் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து நான்கு மணி நேரத்திற்குப் பின் மாணவியின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சொந்த ஊரான தெக்களூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது. தொடர்ந்து பொது மக்கள் அஞ்சலிக்காக மாணவியின் சடலம் வைக்கப்பட்டு, மாலை 5.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாணவியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்:கிடைத்தது பிரேதப்பரிசோதனை முடிவு!

இதையும் படிங்க:திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details