தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஊரடங்கு உத்தரவு வரும் மே17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிப்பு செய்யப்படுவதாக ஆணையிட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில்,
“ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மேலும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். நோய் கட்டுப்பாடு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறையின்படி எந்தவித தடங்கலுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதியைத் தவிர திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பணிகள் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
50 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு குறைந்தபட்சம் 20 நபர்கள் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள பகுதிகளில் ஊரக, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்பட அனுமதிக்கப்படும். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப ஜவுளி நிறுவனங்கள் 50% பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
தொழில் நகரங்களில் தொழிற்பேட்டைகள் 50% பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகரப் பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.