தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவில் கொள்ளையன்.. பகலில் விசிக நிர்வாகி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.! - 49 சவரன் நகைகள் பறிமுதல்

திருநெல்வேலியில் வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 49 சவரன் நகைகள், ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பகலில் விசிக நிர்வாகி
பகலில் விசிக நிர்வாகி

By

Published : Feb 12, 2023, 11:57 AM IST

Updated : Feb 12, 2023, 12:04 PM IST

திருநெல்வேலி:பெருமாள்புரத்தை சேர்ந்த தேவி, பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். இச்சம்பவம் நடந்த சில நாட்களில், குலவணிகர்புரம் பிபிசி காலனியை சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரை வீட்டில், 67 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாநகர காவல்துறையினர், 2 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

காட்டிக் கொடுத்த சிசிடிவி:கொள்ளை நடைபெற்ற நாட்களில், மாநகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் விசிக நிர்வாகி ஜெயக்குமார் சந்தேகத்துக்கு இடமான வகையில், உலா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை காவல்துறையினர் கண்காணித்த போது, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது உறுதியானது.

போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் திருநெல்வேலி டவுண் பகுதியில் வசித்து வருவதும், நெல்லை சட்டமன்ற தொகுதி விசிக துணை செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.

ஜெயக்குமார் சிக்கியது எப்படி?ஜெயக்குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்த போது அவர் சென்னையில் இருந்தார். அவரை போலீசார் பின்தொடர்ந்த நிலையில், சென்னையில் இருந்து பேருந்தில் நேற்று முன்தினம் (பிப்.10) நெல்லை வந்துள்ளார். அப்போது அவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

49 சவரன் நகை பறிமுதல்: கைதான ஜெயக்குமார் அரசு அதிகாரி தேவி மற்றும் வழக்கறிஞர் செல்லத்துரை ஆகியோரது வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 49 சவரன் மதிப்பிலான நகைகள், ரூ.27 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எனினும் 500 சவரன் நகைகளை ஜெயக்குமார் மறைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த பெரும்பாலான நகைகளை, திருப்பணி கரிசல் குளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மூலம் விற்று, ஜெயக்குமார் பணமாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரகாஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொள்ளையடித்த நகைகளை தென்காசி மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் ஜெயக்குமார் விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த நகைக்கடை உரிமையாளரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் தொலைபேசியில் கேட்டபோது, "ஜெயக்குமார் அரசியல் கட்சியில் இருந்து வருகிறார். இந்த கொள்ளை வழக்கில் மேலும் சில கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும். ஜெயக்குமாரை நாளை (பிப்.13) காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: துணை மின் நிலையத்தில் ரூ.14.92 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு - 3 பேர் கைது

Last Updated : Feb 12, 2023, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details