திருநெல்வேலி:பாபநாசம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டதுடன், உடலில் சங்கலியால் அடித்து நேர்த்திக்கடனும் செலுத்தினர். விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்து உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6 ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அமாவாசையை முன்னிட்டு கோயிலில் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படும் மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி பொங்கலிட்டு வழிபடத் தொடங்கினர். காலை தொடங்கிய பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
மதியம் சுமார் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 1 மணிக்கு சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு படையலும் நடைபெற்றது. தளவாய் மாடசாமி மற்றும் பட்டவராயன் சுவாமி கோயிலில் பக்தர்கள் சங்கிலியால் தங்கள் மீது அடித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். இது போன்று பட்டவராயன் சுவாமிக்கு செரும்பு வழங்கி நேர்த்திக் கடன் செய்தனர். இரவில் கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.