தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் சென்னை ஐஐடி சென்று அரசுப்பள்ளி மாணவர்கள் ஆய்வு: நெல்லை ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்

JEE நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 21 அரசு பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தனது சொந்த செலவில் விமானம் மூலம் சென்னை ஐஐடிக்கு ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தார்.

By

Published : Mar 12, 2022, 3:02 PM IST

விமானத்தில் சென்னை ஐஐடி
விமானத்தில் சென்னை ஐஐடி

திருநெல்வேலி:மருத்துவம் படிக்க மாணவர்கள் நீட் தேர்வு எதிர் கொள்வது போல உயர் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பதற்கு JEE ( Joint Entrance Examination ) எனப்படும் நுழைவுத் தேர்வு உள்ளது. இந்தப் பயிற்சியை நெல்லை ஆட்சியர் விஷ்ணு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தொடங்கியுள்ளார்.

JEE நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. 500 மாணவர்கள் தேர்வில் பங்கேற்ற நிலையில், 70 பேர் தேர்வாகினர். அந்த 70 பேரில் நேர்காணல் மூலம் 21 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தேர்வான மாணவர்கள் 21 பேரும், நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் அரசு பள்ளியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் 11வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆவர்.

ஆன்லைன் பயிற்சி

நெல்லை மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேட்டை, ஏர்வாடி, களக்காடு, கூடங்குளம், முனைஞ்சிப்பட்டி, மருதகுளம், திருக்குறுங்குடி, செட்டிகுளம் உள்பட 14 அரசு பள்ளிகளில் இருந்து 8 மாணவர்கள், 13 மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஜனவரி மாதம் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வாரத்தில் 5 நாட்கள் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ( IIT - இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில்) 21 மாணவர்களும் சென்று அங்கு நேரடியாக பல்வேறு விஷயங்களை கற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

விமானத்தில் இலவச பயணம்

கடந்த மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதி என இரண்டு நாட்கள் சென்னையில் பயிற்சி பெற சென்றனர். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தனது சொந்த செலவில் மாணவர்களை விமானம் மூலம் சென்னை ஐஐடிக்கு அனுப்பி வைத்தார். மாணவர்கள் கற்றுக் கொள்ளப் போகும் உயர்தொழில்நுட்ப பாடம் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்சியர் மாணவர்களை இலவசமாக விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பிரபு ரஞ்சித்எடிசன் மற்றும் ஆசிரியர் சியாமளா பாய் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

முதலில் சென்னை ஐஐடியில் உள்ள பேராசிரியர்கள் உடன் மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர். மேலும் அங்கு உள்ள பல்வேறு வகையான ஆய்வுக்கூடங்களை நேரடியாக சென்று பார்த்தனர். பின்னர் பிர்லா கோளரங்கம் சென்று பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்து கற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் "இல்லம் தேடி கல்வி'' திட்டத்தின் இயக்குநராக உள்ள ஐஏஎஸ் அலுவலர் இளம்பகவத்தைச் சந்தித்து மாணவர்கள் கலந்துரையாடினர். இளம்பகவத், மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். பின்னர் சென்னை அண்ணா நூலகம் சென்றுவிட்டு, நேற்று (மார்ச் 11) ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தனர்.

விமானத்தில் சென்னை ஐஐடி சென்று அரசுப்பள்ளி மாணவர்கள் ஆய்வு

JEE நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு பல லட்சங்கள் செலவாகும் நிலையில் இலவசமாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி குறிப்பாக இலவச விமான பயணம், IIT பேராசிரியர்கள் உடன் கலந்துரையாடல் போன்றவை மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க: தாயகம் திரும்பிய கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு..! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி...

ABOUT THE AUTHOR

...view details