நெல்லைமாநகராட்சி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 55 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதில் 51 மாமன்ற உறுப்பினர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்கள், நான்கு மாமன்ற உறுப்பினர்கள், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதிக பெரும்பான்மையுடன் திமுக மாநகராட்சியை கைப்பற்றி மேயராக 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணனும், துணைமேயராக ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜூவும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நேற்றைய தினம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் திமுக மாநகர செயலாளராக உள்ள சுப்பிரமணியம் மற்றும் சிலர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டவர்களுடன் பேசி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி மேயர் மீது அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. வழக்கமாக மேயர், துணை மேயர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெறும்.
ஆனால், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கமாக நடைபெறும் இடத்தில் நடத்தப்படாமல், ஆணையாளர் அறையில் நடந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர திமுக செயலாளராக உள்ள சுப்பிரமணியம் மற்றும் பாளையங்கோட்டை திமுக பகுதி செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் மாநகர திமுக அலுவலகம் அமைந்துள்ள 27ஆவது வார்டு பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை வைத்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.