திருநெல்வேலி மாவட்டம், ஹைகிரவுன்ட்டில் இருந்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியாகப் பழைய பேருந்து நிலையம் நோக்கி, தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பேருந்து சித்தா கல்லூரி அருகே வரும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார். விசாரணையில் அவர், பெரியபாளையத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பது தெரியவந்தது.
மேலும் அவர் நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் செல்வகணபதி விபத்தில் சிக்கியதை அறிந்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ஆத்திரத்தில் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் தான் விபத்து நடைபெற்றதாக கூறி, கற்களைக் கொண்டு பேருந்தை அடித்து நொறுக்கினர்.
இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மாநகர துணை காவல் ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.