திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை, போலீசார் கட்டிங் பிளேயரை வைத்து பிடுங்கியதாகப் புகார் எழுந்தது. அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் தலைமையிலான போலீசாரே இதற்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனின் உத்தரவின் அடிப்படையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விக்கிரமசிங்கபுரம் காவல் தனிப்பிரிவு காவலர் போகபூமன், கல்லிடை தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், கல்லிடை காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் வேறு சில காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.