நெல்லை:ஜாய் என்ற இளைஞர் தனது 8 வயதில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி மனு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக ஜாயை இலங்கைக்கு அனுப்பும்படி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் மீது வழக்குகள் இருந்ததால், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஜாய் இன்று(பிப்.21) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்றபோது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்ப முடியாது, வேண்டுமானால் வேறு ஒரு அதிகாரியிடம் தெரிவியுங்கள் என கூறியதாக தெரிகிறது.