திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.250 சிறப்புக் கட்டணம் தரிசனம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இனி, ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும் பொதுதரிசனம் ஆகிய இரு வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் தரிசனத்தில் மாற்றங்கள்
இந்த நடைமுறை இன்று(மார்ச்.9) முதல் அமலுக்கு வருவதாகக் கோயில் இணை ஆணையர் குமரதுரை (பொறுப்பு) தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ரூ.250, ரூ.100, ரூ.20 ஆகிய கட்டண தரிசனங்களும், பொதுதரிசனமும் என நான்கு வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதில் ரூ.250 மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பல்வேறு வகையில் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்நிலையில், கோயில் தரிசனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரப் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கோயிலில் ஆயுதப்படை காவல்துறையினரைப் பணியில் நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவுபடி இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தார்கள். இக்கோயிலில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது.