தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன - ராஜகண்ணப்பன்

போக்குவரத்து துறையில் விரைவில் ஆறு ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன எனவும், புதிதாக 2,210 பேருந்துகளும் 500 எலக்ட்ரிக் பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 28, 2021, 9:21 AM IST

Updated : Oct 28, 2021, 9:37 AM IST

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

திருநெல்வேலி:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பண்டிகையை முன்னிட்டு பேருந்து வசதிகள்

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட ராஜகண்ணப்பன், மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூறினார். கூட்டம் நிறைவில் செயதியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 16 ஆயிரத்து 140 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று விடுமுறைகள் முடிந்து பொதுமக்கள் திரும்பி வருவதற்காக கூடுதலாக 17 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி

மேலும் இது தவிர மக்களின் கூட்டத்தைப் பொருத்து கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளோம். பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்களிடமிருந்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

காலி பணியிடங்கள் நிரப்பல்

இதுவரை தீபாவளி பண்டிகைக்காக அரசு பேருந்துகளில் 35,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது 20,555 பேருந்துகள் உள்ளன. நஷ்டத்தைத் தவிர்க்கும் வகையில் 42 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடும் டயர்கள் தவிர்க்கப்பட்டு, தற்போது 54 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடும் டயர்கள் பேருந்துகளுக்கு பொருத்தப்படுகிறன.

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக இரண்டாயிரத்து 210 பேருந்துகளும், 500 எலக்ட்ரிக் பேருந்துகளும் வாங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும். பின்னர் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து துறையில் உள்ள ஆறு ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு பண பலன்கள் கிடைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் அதனடிப்படையில் அவர்களுக்கான தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கரோனா காரணமாக நடைபெறவில்லை. விரைவில் பொருளாதாரம் சீர் அடைந்தவுடன் முதலமைச்சரிடம் பேசி தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ஆட்சியர் அலுவலகம் அருகே கொக்கரகுளத்தில் மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பயணிகள் நிழற்குடைக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய வீல் சேரை வழங்கினார்.

இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி

Last Updated : Oct 28, 2021, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details