தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டியை பராமரிக்க மனம் இல்லாமல் சுடுகாட்டில் விட்டுச் சென்ற உறவினர்கள்.. நெல்லையில் மடிந்ததா மனிதாபிமானம்?

களக்காடு அருகே மூதாட்டியை பராமரிக்க மனமில்லாமல் உறவினர்கள் சுடுகாட்டில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 4, 2023, 2:16 PM IST

relatives left the old woman in the crematorium without the heart to take care of them
மூதாட்டியை பராமரிக்க மனம் இல்லாமல் சுடுகாட்டில் உறவினர்கள் விட்டுச் சென்றது களக்காட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மூதாட்டியை பராமரிக்க மனம் இல்லாமல் சுடுகாட்டில் உறவினர்கள் விட்டுச் சென்றது களக்காட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருநெல்வேலி:களக்காடு, சிதம்பரபுரத்தில் மூனாற்று பிரிவு என்ற இடத்தில் சுடுகாடுகள் உள்ளது. இந்த சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் விசாரித்த போது உறவினர்களே தன்னை சுடுகாட்டில் வீசிச் சென்றதாக கூறியது அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் (80) என்பது தெரியவந்தது. அவரது கணவர் ஆறுமுகம் இறந்து விட்டதால், மூதாட்டியை அவரது மகன் கந்தசாமி பராமரித்து வந்துள்ளார்.கந்தசாமிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இந்நிலையில் மகனும் உயிரிழந்ததால், கந்தசாமியின் இரு மனைவிகளும் மூதாட்டி இசக்கியம்மாளை பராமரித்து வந்துள்ளனர். இசக்கியம்மாளும் அக்கம், பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நாளடையில் வயது முதிர்வின் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உடல் நல குறைவும், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் பராமரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி சுடுகாட்டில் விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் பயன்படுத்திய சேலைகளையும் மூட்டையாக கட்டி அருகில் போட்டு விட்டுச் சென்று விட்டனர். அவர் உணவுக்கு வழியின்றி தவித்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவருக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளனர்.

மூதாட்டியை பராமரிக்க மறுத்து, உறவினர்களே சுடுகாட்டில் உயிருடன் விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும் லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பின் போலீசார் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் எச்சரித்து, அவரை ஒப்படைக்க முயற்சி செய்தனர்.ஆனால் அவர்கள் மூதாட்டியை ஏற்கவும், பராமரிக்கவும் மறுத்து விட்டனர்.

இதையடுத்து மூதாட்டி நடுத் தெருவில் ஆதரவின்றி தவித்து வருகிறார். மூதாட்டி இசக்கியம்மாள் வைத்திருந்த மோதிரத்தையும், அவர் வைத்திருந்த ரூ 40 ஆயிரம் பணத்தையும் சிலர் ஏமாற்றி பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து தான் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மனநிலை பாதிப்பால் மூதாட்டி எந்த நேரமும் பேசிக் கொண்டும், ஏசிக் கொண்டும் இருக்கிறார்.

இது குறித்து நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இசக்கியமாளை காப்பகத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். நவநாகரீக காலத்தில் மனிதர்களிடம் மனிதாபிமானம் குறைந்து வருவதை இதுபோன்ற சம்பவங்களால் அடிக்கடி பார்க்க முடிகிறது. வீட்டில் வைத்து பாராமரிக்க முடியாத உயிரற்ற பொருளை வீதியில் வீசுவதை போன்று உயிரோடு உள்ள மூதாட்டியை பாரமரிக்க முடியாமல் சுடுகாட்டில் கட்டிலுடன் வீசிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: IFS Scam: நெமியிலில் ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details