தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 4, 2023, 9:12 PM IST

ETV Bharat / state

'மாநிலப் பல்கலைக்கழகங்களை கொல்ல தமிழ்நாட்டில் சதி' - பேராசிரியர் நாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!

'தமிழ்நாட்டில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் கொல்லப்படுவதற்கு சதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டில் இருந்து இப்பல்கலைக்கழக விவகாரத்தை செய்து விட்டது' என செனட் கூட்டத்தில் பேராசிரியர் நாகராஜன் வேதனையோடு பேசினார்.

Etv Bharat செனட் கூட்டத்தில் பேராசிரியர் நாகராஜன் பேச்சு
Etv Bharat செனட் கூட்டத்தில் பேராசிரியர் நாகராஜன் பேச்சு

செனட் கூட்டத்தில் பேராசிரியர் நாகராஜன் பேச்சு

திருநெல்வேலிமாவட்டம், அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் இன்று (ஆக.04) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தொடர்ந்து மூட்டா அமைப்பின் நிர்வாகியும் செனட் உறுப்பினருமான பேராசிரியர் நாகராஜன் கூட்டத்தில் பேசும்போது, ''மாநில பல்கலைக் கழகங்களுக்கான நிதியை அரசு முறையாக தருவதில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பத்து துறைகள் உள்ளன என்றால், ஒருதுறைக்கு ஏழு ஆசிரியர் என சுமார் 78 ஆசிரியர்கள் பணிபுரிவார்கள்.

இவர்களுக்கு சம்பளம் மட்டும் மாதத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரும். ஆனால், அரசு ஒரு காலாண்டுக்கே 93 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். ஒரு மாதம் இப்பல்கலைக்கழகம் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் சேர்த்து 5 கோடி ரூபாய் செலவு செய்கிறது.

ஒரு மனிதன் உயிரோடு இருக்க எனர்ஜி தேவைப்படுவதைப் போல ஒரு பல்கலைக்கழகம் உயிரோடு இருக்க ஆசிரியர்களுக்கான சம்பள ஒதுக்கீடு தேவை. 2017ஆம் ஆண்டு இருந்து அது தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை விவகாரத்து செய்துவிட்டது.

நாம் பராமரிப்பு கேட்டு வருகிறோம். மாநில பல்கலைக்கழகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொல்லப்படுகிறது. நிதி இல்லை என்றால் என்ன ஆகும்... பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை கேட்டால் சம்பளம் போட காசு இல்லை என்கிறார்கள். ‘என்ன கொடுமை சார் இது’ மாநில அரசு பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு 7ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஆனால், ஒரு மாநில பலகலைக்கழகத்துக்கு நான்கு மாதம் ஒருமுறை 93 லட்சம் ரூபாய் கொடுத்தால் எந்த வகையில் நியாயம்.

யார் கேட்பது இதை, மாநில பல்கலைக்கழகங்கள் எல்லாம் கொல்லப்படுவதற்கு சதித் திட்டம் நடக்கிறதோ என்று வருத்தப்படுகிறேன். இதனால் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரித்து விட்டது. மாநில பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்த நிலை நீடித்தால் யாரும் நிர்வாகத்தில் இருக்க முடியாது. இப்போது நாம் சங்கை ஊதவில்லை என்றால் மிக மோசமான நிலைக்கு போய்விடுவோம். இது நமது ஜனநாயக கடமை. எனவே, இந்த கோரிக்கையை அரசின் செவிட்டு காதுகளுக்கு எட்ட செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பேராசிரியர் நாகராஜன் குறிப்பிட்டுப் பேசும்போது, “அரசு பல்கலைக்கழகத்திற்கு சரிவர நிதி ஒதுக்காததால் தற்போது மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் ஊக்கத்தொகை போன்றவற்றில் இருந்து பணத்தை எடுத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

இங்கு படித்த பலர் உயர் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக வரும் தலைமுறையினருக்கு இப்பல்கலைக்கழகம் பாதுகாக்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் நிலவுகிறது’’ என்றார்.

இதையும் படிங்க:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தொலைதூரப் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details