திருநெல்வேலி:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கம்பைன்டு ஸ்டேட்டிஸ்டிகல் சப் ஆர்டினேட் போட்டி தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது, ஆனால் அன்று முழு ஊரடங்கு என்பதால் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 11ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்ததைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுதும் தேர்வு நடைபெற்றது.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகர் முழுவதும் 12 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் மூன்றாயிரத்து 553 மாணவர்கள் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தேர்வு எழுதினர்.
காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கியது முன்னதாக 8.30 மணி முதலே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கரோனோ 3ஆம் அலை, ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அனைத்துத் தேர்வு மையங்களிலும் நுழைவாயிலில் தேர்வுகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகலும் இத்தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்: ஸ்டாலின் அடிக்கல் நாட்டல்