தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 9:56 PM IST

Updated : Dec 5, 2020, 10:02 PM IST

ETV Bharat / state

’விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும் பத்தமடைப் பாய்கள்’

பிற மாவட்டங்களில் கோரைப்பாய்கள் நெய்தாலும், பத்தமடைப் பாய்க்கு என்றுமே கிராக்கி அதிகம். ஆனால், கரோனா பொதுமுடக்கத்தால் பத்தமடையில் சுமார் 20 லட்சம் பாய்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் ஏற்கனவே சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கவலைக்கிடமாகியுள்ளது.

கோரைப்பாய்
கோரைப்பாய்

திருநெல்வேலி : தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் கோரப் புல்லிலிருந்து நெய்யப்படும் பாய், உலக அளவில் பிரபலம். அதெப்படி, தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் தயாராகும் பாய் உலகமெங்கும் பரவலாகப் பேசப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறதா? 1953ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணிக்கு பத்தமடைப் பாய் பரிசாக அளிக்கப்பட்டது. இந்தப் பரிசுப் பரிமாற்றம்தான் பத்தமடைப் பாயை அயல்நாட்டிலும் பேசுபொருளாக்கியது.

இதுபோல் வரலாற்றின் பக்கங்களில் பத்தமடைப் பாய் குறித்த பல சுவாரசியத் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. 300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய், மத்திய அரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது.

நெய்யப்படும் பாய்

திருநெல்வேலியிலிருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய் செய்வதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும், பத்தமடைப் பாய் தான் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனித்துவமான பத்தமடைப் பாய்

பிற மாவட்டங்களில், பாய் நெய்வதற்கான கோரைப்புற்களை தோட்டத்தில் பயிரிட்டு உற்பத்தி செய்கின்றனர். ஆனால் பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கோரைப்புற்கள் தானாகவே வளர்ந்து செழித்தோங்கி நிற்கின்றன. பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணியில் பல மூலிகைக் குணம் நிறைந்திருப்பதால் இங்கு விளையும் கோரைப்புற்களுக்கும் இந்தக் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உடலுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது.

பெரும்பாலும் பாய் நெய்யும் தொழிலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள மூன்று தலைமுறைகளாகப் பாய் நெய்யும் முகமது சுல்தானிடம் கேட்டோம். ’பாய் நெய்வது எளிதான காரியமல்ல, நாள்கணக்கில் உழைப்பை அளிக்கவேண்டும். இந்தப் பணியில் ஈடுபடும் பெண்கள் பொறுமைசாலிகள். அதுவும் இந்தப் பாய்களின் தனித்துவத்திற்குக் காரணம்” என்கிறார் மெல்லிய புன்னகையுடன்.

அடேயப்பா இப்படித்தான் பாய் நெய்யறாங்களா?

செழுமையாக வளர்ந்த கோரைப்புற்களை வெட்டியெடுத்ததும் முதலில் வெயிலில் உலர வைக்கின்றனர். புற்களை தண்ணீரில் அதிகபட்சம் ஏழு நாள்கள்வரை அழுக வைத்த பின், ரகத்திற்கு ஏற்ப அவற்றைப் பிரித்து தேவையான வண்ணங்களில் சாயம் பூசுகின்றனர். தொடர்ந்து வண்ணங்களை தன் மீது வரித்துக் கொண்ட கோரைப்புற்களை விசைத்தறி, கைத்தறி மூலமாக பாய்களாக நெய்து எடுக்கின்றனர். இது மட்டுமின்றி, இந்த கோரைப் புற்களைக் கொண்டு மணிபர்ஸ், தாம்பூலம் கவர், அர்ச்சனைப் பை, பெண்கள் பயன்படுத்தும் கைப்பை, விசிறி, நகைப்பை என விதவிதமான பேன்சி பொருள்களும் நெசவு செய்யப்படுகின்றன.

கோரைப்பாயில் காந்தியின் உருவம்

இங்கு நெசவு செய்யப்படும் பாய்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். தற்போது அதிகபட்சம் 9 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்பனை ஆகிறது. இந்தப் பாய்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

விலையுயர்ந்த பட்டுப் பாய்யும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி மூலம் ஒரு பாயை நெசவு செய்வதற்கு அதிக பட்சம் இரண்டு வாரங்கள் ஆகும். காலத்துக்கேற்ப பத்தமடைப் பாய் செய்யும் தொழிலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இப்ப ட்ரெண்ட் இதுதான் பாஸு!

பத்தமடையில் நெய்யப்படும் கல்யாணப் பாய்க்கு மவுசு அதிகம். மணமக்களின் உருவத்தை பாயில் ஓவியமாக வரைந்து கூடவே அவர்களது பெயர்களையும் எழுதிக் கொடுக்கும் பாய்களுக்கு கல்யாணப் பட்டு பாய் என்று பெயர். இதற்கு வாடிக்கையாளர்களும் அதிகம். புகைப்படம் வரையப்பட்ட பாயை மூன்றாயிரம் ரூபாய்க்கும், பெயர் மட்டும் எழுதும் பாய்க்கு இரண்டாயிரத்து 500 ரூபாயும் கூலியாகப் பெற்றுக் கொள்ளும் இத்தொழிலாளர்களை, கரோனா பொதுமுடக்கம் நிறையவே சோதித்துவிட்டது.

கல்யாண பட்டு பாய்

கல்யாணப் பாய் நெய்தலில் ஓரளவு வருமானம் கண்ட இவர்களுக்கு சுப நிகழ்ச்சிகளின் தடை பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. முன்பு போல கோரைப்பாய்களுக்கு வரவேற்பு இல்லையென்னும் தொழிலாளர்கள், திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் தான் தங்களின் அடிநாதம் என்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, பொதுமுடக்கத்தில் எவ்வித விற்பனையும் இல்லாததால் தற்போது வரை பத்தமடையில் சுமார் 20 லட்சம் பாய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும் பத்தமடைப் பாய்கள்

ஏற்கனவே மழை நேரங்களில் தொழில் முடங்கி சிரமப்படும் தங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அரசு மறந்துவிடுவதாகத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், இந்தப் பொதுமுடக்கத்திலும் மாநில அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை என வேதனைத் தெரிவிக்கின்றனர்.

கைத்தறியில் பாயை நெய்தால் மாதத்திற்கு இரண்டு பாய் தான் நெய்ய முடியும். அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் தான் வருமானம். இதை நம்பித்தான் பத்தமடையில் வசிக்கும் பல மூதாட்டிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இயக்குநர் பாரதி ராஜா

ஆனால், பாலின பேதமின்றி செய்யப்பட்டும் இத்தொழிலில் கிடைக்கும் வருமானமோ மிகச்சொற்பம். கரோனா காலத்தில் அதுவுமின்றி தவித்தோம் என்கிறார், காஜாமைதீன். “அன்றாடங்காய்ச்சியாக பிழைப்பு நடத்தும் எங்களை அரசு எப்போதுமே கண்டுகொள்வதில்லை. முன்பு போல கோரப்புற்களும் கிடைப்பதில்லை. ஊரடங்கில் இருவேளை உணவுக்கே வழியின்றி தவித்தோம்”எனும் காஜாமைதீனின் எதார்த்த வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது.

பாரம்பரியமாகச் செய்யப்பட்டு வந்த இந்தத் தொழில் போதிய வருமானமின்றி பலரால் கைவிடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தபடி வணிக மையத்தை உடனே தொடங்கினால் தொழில் மேம்படும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார், முகமது சுல்தான்.

மற்ற ஊர் போல இல்லை பத்தமடையில் நெய்யப்படும் பாய் எனும் அவர், ”ரகங்களைப் பொறுத்து கோரையை அழுக வைத்து கிழித்து பாய் செய்வோம். நான்கு நாள் ஊற வைத்தால் ஒரு கவுண்ட், ஏழு நாள் ஊற வைத்தால் ஒரு கவுண்ட். கவுண்ட் அதிகரிக்க அதிகரிக்க பாயின் மெல்லியத் தன்மை அதிகரிக்கும். பத்தமடைப் பாய் மாநிலளவிலான விருதுகளைப் பெற்றுள்ளது. முன்னர் 300 பேர் ஈடுபட்ட இத்தொழிலில் தற்போது 40 முதல் 50 குடும்பத்தினர் மட்டுமே தொழிலில் ஈடுபடுகிறோம். ஒரு மாதத்திற்கு சராசரியாக 300 கல்யாண பட்டுப் பாய்களையும், லட்சக்கணக்கிலான சாதாரணப் பாய்களையும் உற்பத்தி செய்தோம். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை பாதியாகியுள்ளது” என வேதனைத் தெரிவிக்கிறார்.

கோரைப்புற்களில் செய்த கைப்பை

நாகரிக உலகத்தில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பொருள்களுக்கு எப்போதுமே தேவை இருக்கிறது. நன்மை பயக்கும் கோரைப்பாய்களோ போதிய விற்பனை இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க அரசு இனியாவது முன் வருமா ? காத்திருக்கிறார்கள், தூங்கா விழிகளோடு தொழிலாளர்கள்.

Last Updated : Dec 5, 2020, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details