திருநெல்வேலி:மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவசங்கர், "பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளி கல்லூரி விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விடுதி காப்பாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் விடுதிக் காப்பாளர்கள் உரியப் பயிற்சி அளிக்க வேண்டும்" என்று பேசினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மாணவர்களின் திறன் மேம்பாடு
அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை 100% வழங்க ஆய்வுக் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஐஎம், ஐஐடி கல்வி நிலைகளில் படிக்க மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை உயர்த்தப்படும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி கற்கும் நிறுவனங்களான ஐஐஎம், ஐஐடி கல்வி நிலைகளில் படிக்க விரும்பினால் Scholarships for backward class students ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள 1,350 விடுதிகளையும் பராமரிப்பதற்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள், கலை திருவிழாக்கள் நடத்தப்படும்.
மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள மூன்று நரிக்குறவர் காலணியில் வசிக்கும் குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை
அமைச்சர் பேட்டியின் போது, நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் எத்தனை விடுதிகள் உள்ளன ? அதில் எத்தனை மாணவர்கள் தங்கிப் பயில்கின்றனர் என்று நிருபர்கள் கேள்வி கேட்டபோது அதற்கு உடனடியாக பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் சிவசங்கர் திணறினர். அருகிலிருந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையரும் கேள்விக்கு உரியப் பதில் தெரியாமல் தனது கீழ் அலுவலர்களிடம் தகவலைத் திரட்டினார்.
இதனையடுத்து, பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நெல்லை மாவட்டத்தில் 27 விடுதிகள் இருப்பதாகவும் அதில் 1,300 மாணவர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போது 401 மாணவர்கள் மட்டுமே தங்கி இருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அதேசமயம் இந்த 27 விடுதிகளிலும் 300க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அலுவலர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது அமைச்சரின் பதில் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்