நெல்லை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய கல்விக் கொள்கையில் மாநில அரசின் உரிமையை பறிக்கும் விதமாக பல சரத்துகள் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்தும் பொறுப்பை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்திடம் மத்தியஅரசு ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மூத்த பேராசிரியர்களை கொண்டு அனைத்து பல்கலை மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பான பயிற்சியில் சேர விரும்பும் மூத்த பேராசிரியர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும்படி அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த பயிற்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) தலைவரும் மூத்த பேராசிரியருமான கிருஷ்ணன் தானும் தனது துறை பேராசிரியர்களும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக பதிவாளருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.