தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2021, 11:00 AM IST

ETV Bharat / state

'தகவல் தொழில் நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டங்கள் விரைவில் வரும்' - அமைச்சர் மனோ தங்கராஜ்

தகவல் தொழில் நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

it-minister
அமைச்சர் மனோ தங்கராஜ்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு நேற்று(ஜுன் 14) தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கு செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனத்தையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கங்கைகொண்டானில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது.

ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தில் இரண்டு நிறுவனங்கள் தவிர, வேறு நிறுவனங்கள் இங்குத் தொழில் தொடங்க முன்வரவில்லை .

தென் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தென் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது, இங்குப் பல தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து அதன் மூலமாகப் பொருளாதாரத்தை உயர்த்துவது என்பதைக் குறிக்கோளாக கொண்டு கருணாநிதி விரும்பியவாறு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா மேம்படுத்தப்படும்.

கிராமப்புறத்தில் படித்த இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்குத் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் திறன்வளர் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.

சிறந்த தகவல் தொழில் நுட்பப் பூங்கா

இங்குத் தொழில் தொடங்க விரும்பும் மென்பொருள் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை எளிமையாக்க முடியும் என்றால், அதனையும் செய்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, இந்தப் பகுதியில் சிறந்த தகவல் தொழில் நுட்பப் பூங்கா உருவாக்கப்படும்.

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் புரட்சி திட்டங்கள்

தகவல் தொழில் நுட்பத் துறையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தி, ஆங்கிலத்தில் தொலைபேசி அழைப்பு செய்யும்போது வரும் கரோனா விழிப்புணர்வு பரப்புரை ஜுன் 13 முதல் தமிழ் மொழியில் பரப்புரை செய்யப்படுகிறது.

மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திரைக்கடல் ஓடி திரவியம் தேடப் புறப்பட்டனர் கடலோடிகள்

ABOUT THE AUTHOR

...view details