தீ விபத்திற்குள்ளான ஏடிஎம்: காவல் துறையினர் விசாரணை - ஏடிஎம் இயந்திரத்தில் தீ விபத்து
திருநெல்வேலி: புதிய பேருந்து நிலையத்தின் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் டேவிட், உதவி அலுவலர்கள் மூர்த்தி, காந்தி ஆகியோர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது இயந்திரத்தின் முன் பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து உடனடியாக அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை ஏடிஎம் இயந்திரத்தின் முன் பகுதி மட்டும் தீயில் கருகி நாசமாகியது. இதற்கிடையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் ஆனந்த் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஏடிஎம் மையத்தில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.