தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் தர்காவில் வைத்து இளம்பெண்ணை கொலை செய்த கணவர் கைது

நெல்லையில் உள்ள தர்கா ஒன்றில் வைத்து, கட்டிய மனைவியை, கணவர் கொலை செய்தார். அவர் போலீசிடம் சரண் அடைந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

horror in Nellai - husband kills his wife in dargah
நெல்லையில் தர்காவில் வைத்து இளம்பெண்ணை கொலை செய்த கணவர் கைது

By

Published : May 23, 2023, 11:58 AM IST

திருநெல்வேலி: நெல்லை தர்காவில், கணவரால், இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், இம்ரான் கான்(34), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சஜிதா பேகம்(25) என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்து ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் இம்ரான் கானின் மனைவி சஜிதா பேகம் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் மனைவி வீட்டுக்குச் சென்ற இம்ரான் கான் மனைவியுடன் பேசி ஒற்றுமையாக இருக்கலாம் என தெரிவித்து அவரை வெளியே அழைத்து வந்ததாகத் தெரிகிறது.

இம்ரான் கான் தனது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு டவுன் பகுதியில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள குளத்தங்கரை முகைதீன் மீரா சாகிபு தர்காவிற்கு வந்துள்ளார். அங்கு இருவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கையில் இம்ரான் கான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சஜிதா பேகத்தை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து சாதாரணமாக வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

தர்காவில் அலறல் சத்தம் கேட்டு எதிர் கடையில் இருந்த சிலர் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேட்டை போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்ததோடு ரத்த வெள்ளத்தில் இருந்த சஜிதா பேகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சஜிதா பேகம் செல்லும் வழியில் இறந்துவிட்டார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பைக்கில் தப்பிச்சென்ற கணவன் இம்ரான் கான் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இவர் எதற்காக மனைவியைக் கொலை செய்தார்? என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணையைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் அமைந்திருக்கும் தர்காவில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சரத்பாபு மரணம்: பிரதமர், ஆளுநர், ரஜினி, கமல் உள்ளிட்டப் பலர் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details