பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் ஜூட்விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்.. பள்ளி மாணவர்கள் படுகாயம்.. திருநெல்வேலி: நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நெல்லை நகர் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெரும்பாலும் அரசு பேருந்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்தில் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். வழக்கமாகப் பள்ளி முடிந்து நெல்லை நகர் மற்றும் அதன் ஒட்டி உள்ள பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பேருந்துகளில் ஏறுவதற்காகப் பள்ளி முன்பு கூட்டமாக மாணவர்கள் நிற்பது வழக்கம்.
இந்த நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து முக்கூடல் நோக்கிச் சென்ற TN 72 N 1823 என்ற எண் கொண்ட டவுன் பேருந்து ஸ்ரீபுரம் டவுன் வழியாகச் சென்றபோது, அங்கு அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பு அதிகமான மாணவர்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
நிற்காமல் சென்ற பேருந்தை பிடிக்க வேகமாக ஓடிய மாணவர்கள் சிலர், ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பேருந்தின் ஓட்டுநர் முருகன் மாணவர்கள் ஓடி வருவதைக் கண்டும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. முக்கூடல் பேருந்தில் சென்றால் காட்சி மண்டபம், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாணவர்கள் எளிதில் சென்று சேர முடியும் என்ற எண்ணத்தில் பேருந்தை நோக்கி முண்டியடித்துக் கொண்டு கூட்டமாக மாணவர்கள் ஓடிய நிலையில் ஓட்டுநரின் அலட்சியத்தால் பலர் கால் இடறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.
மேலும் வாகனங்கள் அதிகம் வரக்கூடிய மிக முக்கிய சாலையில் பேருந்தில் இடம் பிடிக்க மாணவர்கள் வேகமாக ஓடிய நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் பள்ளி மாணவர்களை அலைக்கழிக்காமல் பேருந்தில் ஏற்றிச் செல்ல வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய நிலையிலும் மாணவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் மனிதாபிமானம் இல்லாத செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் பேருந்து நிற்காமல் செல்வது போன்றும் மாணவர்கள் ஓடிச் சென்று ஏற முயல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநர் முத்துப்பாண்டி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:"கரூரில் தனி அரசாங்கம் நடைபெறுகிறது... வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள்" - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!